காவல்துறை சார்பில் 22 கோடியே 9 லட்சம் ரூபாய் செலவிலும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் 16 கோடியே 96 லட்சம் ரூபாய் செலவிலும், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை சார்பில் 68 இலட்சத்து 47 ஆயிரம் ரூபாய் செலவிலும் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
இந்த கட்டிடங்களை, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். மேலும், 9 புதிய காவல் நிலையங்களையும், புதிதாக உருவாக்கப்பட்ட உத்திரமேரூர், வேளாங்கண்ணி மற்றும் பள்ளிப்பாளையம் ஆகிய மூன்று புதிய காவல் உட்கோட்டங்களையும், அவர் திறந்து வைத்தார்.
இதேபோல், பள்ளிக் கல்வித் துறை சார்பில், 20 மாவட்டங்களில், 60 அரசுப் பள்ளிகளில், 96 கோடியே 49 லட்சம் ரூபாய் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 392 புதிய வகுப்பறைக் கட்டடங்கள், 4 ஆய்வகக் கட்டடங்கள், 16 கழிப்பறைக் கட்டடங்கள், 8 குடிநீர் வசதிப் பணிகளை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
இதுதவிர, கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 113 கோடியே 68 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2 மாவட்ட அரசு மாதிரிப் பள்ளிக் கட்டடங்கள் மற்றும் விடுதிக் கட்டடங்களையும் முதல்வர் திறந்து வைத்தார்.
17 கோடியே 82 லட்சம் ரூபாய் செலவில் 20 மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள 68 நூலகக் கட்டடங்கள் மற்றும் கடலூர், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஒரு கோடியே 90 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 3 கிளை நூலகக் கட்டடங்கள் ஆகியவற்றையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்ட மைய நூலகத்திற்கு 4 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டுவதற்கும், முதல்வர் ஸ்டாலின், காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

























