டிட்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்குத் துணை நிற்க, தமிழ்நாடு தயாராக உள்ளது என, முதலமைச்சர் ஸ்டாலின் கூறி இருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், டிட்வா புயல் காரணமாக நமது அண்டை நாடான இலங்கை பேரழிவைச் சந்தித்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இயற்கைச் சீற்றத்தில் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, இலங்கை மக்களின் இப்பெருந்துயரில் தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் பங்கெடுக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளை மீட்க, தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. இதன் பலனாக 117 பேர் தமிழ்நாட்டிற்கு இன்று காலை விமானம் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
டிட்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு, மத்திய அரசின் மூலம், உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் வழங்கி, அவர்கள் மீண்டெழுந்திட உதவிக்கரம் நீட்டிட, தமிழ்நாடு அரசு தயாராக இருக்கிறது.

























