டிட்வா புயலை முன்னிட்டு மக்கள் கடற்கரைகள் அருகில் செல்லவேண்டாம் என்ற காவல்துறை எச்சரிக்கையையும் மீறி பட்டினப்பாக்கம் கடற்கரையில் ஆபத்தை உணராமல் ஏராளமானோர் குவிந்துள்ளனர்.
டிட்வா புயல் காரணமாக சென்னை மெரினா, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட கடல் பகுதிகள் சீற்றத்துடன் காணப்படுகின்றன. பொதுமக்கள் யாரும் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்து வருகின்றனர்.
கடல் அலைகள் மிகுந்த ஆக்ரோஷத்துடன் மணல் பரப்பில் பாதி தூரம் வந்து செல்லும் நிலையில் மண் அரிப்பு ஏற்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமை விடுமுறையை முன்னிட்டு ஆபத்தை உணராத பொதுமக்கள் காவல்துறை எச்சரிக்கையையும் மீறி கடற்கரையில் கூட்டம் கூட்டமாக குடும்பத்துடன் குவிந்துள்ளனர். அவர்கள் குழந்தைகளுடன் நின்று செல்ஃபியும் எடுத்து வருகின்றனர்.

























