இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ஜெய்சங்கருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில், இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 12 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக் கடற்படையினரால் மீனவர்கள் இதுபோன்று தொடர்ந்து கைது செய்யப்பட்டு, அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்படுவதால், மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். இது தமிழ்நாட்டின் கடலோர மீனவ சமூகங்களிடையே மிகுந்த துன்பத்தையும் துயரத்தையும் ஏற்படுத்துவதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.
இந்த நீண்டகால பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான மற்றும் இரு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்வை எட்டுவதற்கு, மீனவர்கள் அளவிலான கூட்டுப்பணிக் குழ பேச்சுவார்த்தையை விரைவில் கூட்டுவதுடன், மத்திய அரசு உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் தனது கடிதத்தில் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

























