உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள கேரள மாநிலத்தில் எஸ்.ஐ.ஆர் படிவங்களை சமர்ப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.
கேரளாவில் வரும் 9 மற்றும் 11-ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதால், எஸ்.ஐ.ஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை ஒத்திவைக்கக் கோரி, அம்மாநில அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜாய் மால்யா பக்ஷி அமர்வில் நடைபெற்றது.
அப்போது, தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான ராகேஷ் திரிவேதி, எஸ்.ஐ.ஆர் படிவங்களை சமர்ப்பிப்பதற்கு வரும் 11-ம் தேதிவரை கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
எனினும் உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் உள்ள ஊழியர்கள் தங்களின் எஸ்.ஐ.ஆர் படிவங்களை அளிப்பதற்கு ஏதுவாக, மேலும் கூடுதலாக காலஅவகாசம் அளிக்க வேண்டும் என்று பரிந்துரைத்த தலைமை நீதிபதி சூர்ய காந்த், இதன் மூலம் விடுபட்டவர்கள் தங்களின் எஸ்.ஐ.ஆர் படிவங்களை அளிக்க அவகாசம் கிடைக்கும் என்றார். அவகாசம் வழங்குவது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட நீதிபதிகள், தேர்தல் ஆணையத்திடம் தங்களின் கால அவகாசம் தொடர்பாக கோரிக்கையை கேரள அரசு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை என்று கேரள மாநில தேர்தல் ஆணையம் மனுத்தாக்கல் செய்துள்ளது. மேலும் 98 புள்ளி எட்டு சதவீத படிவங்கள் விநியோகிக்கப்பட்டு, அவற்றில் 80 சதவீத படிவங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டிருப்பதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

























