திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவை
எதிர்த்து, திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம் சார்ப¤ல் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் பல்வேறு தரப்பினரும் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் இரு நீதிபதிகள் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் அல்ல, எல்லைக்கான சர்வே தூண் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட மதுரை மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவை பிறப்பித்து இருந்ததால், தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவில்லை என்று வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் குறிப்பிட்டார். எனவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மலை உச்சியில் இருப்பது சர்வே தூண் தானா என்பதை உறுதி செய்தீர்களா என கேள்வி எழுப்பினர். இதுதொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், விசாரணையை வரும் திங்கள் கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

























